கோத்தா ஸ்டார்:
குபாங் பாசு மற்றும் கோத்தா ஸ்டாரில் கடந்த இரண்டு மாதங்களாக திருட்டு, வழிப்பறி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேங்காய்ப்பால் விற்பனை செய்யும் கடை உதவியாளரான சந்தேகநபர், 24 வீடுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு ரிங்கிட் 70,000க்கு மேல் நஷ்டம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
33 வயதான அந்த நபர் தனியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக நம்பப்படுவதாக கெடா காவல்துறை துணை தலைவர் டத்தோ அபு சாமா முகமட் நூர் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி, சந்தேக நபர் ஜித்ராவின் கப்பளா பத்தாஸில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 10,000 ரிங்கிட் மதிப்புள்ள விலைமதிப்பற்ற பொருட்களுடன் ஓடிவிட்டார் என புகார் கிடைத்தது என்றார்.
சந்தேக நபர் முதலில் பொருத்தமானது என அவர் கருதும் பகுதியில் நோட்டம் விடுவார், பின்னர் மக்கள் வசிக்காத வீடுகளை குறிவைப்பார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து பல்வேறு பிராண்டுகளின் 75 கைத்தொலைபேசிகள், 4 ஐபேட்கள், 92 கைக்கடிகாரங்கள், 50 மோதிரங்கள், 36 வளையல்கள் மற்றும் பல்வேறு வகையான சீலிங் கொண்ட ஒரு பை உட்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன,” என்று அவர் கூறினார்.
சந்தேக நபரின் இடுப்பில் 20 சென்டிமீட்டர் நீளமுள்ள உறையிடப்பட்ட கத்தியையும் போலீசார் கைப்பற்றியதாக அபு சாமா கூறினார்.
மேலும் சந்தேக நபரின் விசாரணையின் முடிவுகளின்படி, குபாங் பாசுவில் மற்றொரு 37 வயதான உள்ளூர் நபரை போலீசார் கைது செய்தனர்.
“இந்த நபர் திருட்டு நடவடிக்கைகளின் மூலம் சந்தேக நபரால் களவாடப்பட்ட பொருட்களை வாங்குபவர் என்று நம்பப்படுகிறது.
“இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 457 மற்றும் ஆபத்தான பொருட்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டம் 1958 இன் பிரிவு 6 (1) இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.