பல்கலைக்கழகத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு! 14 பேர் பலி

ப்ராக்: செக் குடியரசில் பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ராக் நகரில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை திடீரென துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் மாணவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி ஒளிந்திருக்கின்றனர். முதலில் இந்த சம்பவத்தில் சில மாணவர்களுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நேரம் போக போக உயிரிழப்பு எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்தன. தற்போது வரை 14 பேர் இதில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இது குறித்து அந்நாட்டு போலீசார் கூறுகையில், “24 வயது மாணவன் டேவிட் கோசாக் என்பவர்தான் இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் அவர் தனது தந்தையை கொலை செய்திருக்கிறார். இந்த துப்பாக்கிச்சூடு ஏன் நடத்தப்பட்டது? இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன? டேவிட்டை தவிர வேறு யாரேனும் இதற்கு பின்னால் இருக்கிறார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டேவிட் மீது இதற்கு முன்னர் எந்த குற்ற வழக்கும் பதிவாகியிருக்கவில்லை. வரலாற்று மாணவரான இவர், படிப்பில் திறமையானவர் என்று ஆசியர்களும் கூறியுள்ளனர். இந்த தாக்குதலை இவர் தனியா திட்டமிட்டு செய்திருக்கிறார். அவரிடம் லைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் சில இருந்திருக்கின்றன. தாக்குதலின்போது பல்கலைக்கழகத்தில் நுழையும்போது அவர் கையில் பயங்கர ஆயுதங்களை கொண்டு வந்திருக்கிறார் என்று கூறியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும், தீவிரவாதத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்க பிறகு டேவிட் கொல்லப்பட்டிருக்கிறார். காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துக்கொண்டாரா? என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. அமெரிக்காவில் இது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், தற்போது செக் குடியரசிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருப்பது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செக் குடியரசில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இதுதான் மிகவும் மிக மோசமானது என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here