சுங்கை பூலோ:
கம்போங் பாரு, சுங்கை பூலோவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் மூலம், அடிமையாக வைத்து, உடலுழைப்பு சுரண்டப்பட்ட மூன்று மியன்மார் நாட்டு இளைஞர்கள் மீட்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் அழுக்கு துணியுடன் அருவருப்பான சிறிய அறையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த சோதனையின் போது, 13 மற்றும் 17 வயதுடைய வாலிபர்கள், வெளிநாட்டைச் சேர்ந்த ஏனைய 11 ஆண்களுடன் சேர்ந்து மறுசுழற்சி செய்வதற்காக மின்சாதனப் பொருட்களை உடைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மூவரும் அந்த வளாகத்தில் சில மாதங்கள் மட்டுமே பணிபுரிந்து வந்தார்கள் என்பதும், தொழிற்சாலையின் பின்புறம் உள்ள முதலாளியால் வழங்கப்பட்ட சிறிய அறையில் வசித்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.
பிற்பகல் 2.30 மணியளவில் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJ) பிரிவு D3 (ஆட்கடத்தல் எதிர்ப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் ) மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு கவுன்சிலின் (NSO) தேசிய மூலோபாய அலுவலகம் மூலம் இந்தச் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.