கோலாலம்பூர்:
கூட்டரசு நீதிமன்ற நீதிபதியின் கார் சின்னம் மற்றும் பதிவுத் தகடு ஆகியவற்றைக் கூர்மையான பொருளால் சேதப்படுத்தியதற்காக சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாமான் கோபெராசி போலீஸ் ஃபாசா துவாவில் நடந்த, கார் சின்ன திருட்டு குறித்து நீதிபதியின் 30 வயது டிரைவரிடமிருந்து போலீஸ் புகாரைப் பெற்ற பின்னர், சந்தேக நபர்கள் திங்கள்கிழமை (ஜன 8) தடுத்து வைக்கப்பட்டனர் என்று
செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஹ்மட் சுகர்னோ முகமட் ஜஹாரி கூறினார்.
CCTV காட்சிகள் அடிப்படையில், 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள், காரைச் சேதப்படுத்த ஒரு கல்லைப் பயன்படுத்தியதும், அருகிலுள்ள காற்பந்து மைதானத்தில் விளையாடிவிட்டு வீட்டிற்குச் செல்லும் வழியில் காரில் இருந்த சின்னத்தை வேண்டுமென்றே உடைத்ததும் தெரியவந்தது.
“ஒரு மூத்த சகோதரருக்கு பிறந்தநாள் பரிசாக வழங்குவதற்காக சகோதரர்களில் ஒருவர் சின்னத்தை இழுத்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
“இருவரும் சிலாங்கூரில் உள்ள பத்துமலைப் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் கைது செய்யப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்ட பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சகோதரர்களுக்கு முன்னைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை, ”என்று அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 427ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.