பத்துமலையில் அருள் பாலித்து கொண்டிருக்கும் சுவாமி ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்திற்கு 20,000 வெள்ளி மானியம் வழங்குவதாக டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்தார். மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நேற்றிரவு பத்துமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த தரிசனத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் பத்துமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்திற்கு 20 ஆயிரம் வெள்ளியை வழங்குவதாக அவர் பலத்த கைத்தட்டலுக்கு இடையே அறிவித்தார்.

இதனிடையே பாலா இல்லம் சமூக நல இல்லத்தில் தங்கியிருக்கும் 40 இந்திய மாணவர்கள் பள்ளி சீருடைகள், காலணிகள் மற்றும் புத்தகப் பைகளை வாங்க பத்துமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் நேற்று 8,016 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தது.
இந்த விழாவில் சிறப்பு அங்கமாக பாலா இல்லம் சமூக இல்லத்தை சேர்ந்த 40 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. பாலா இல்லம் சமூக நல இயக்கத்தின் பொறுப்பாளர்களிடம் 8,016 வெள்ளி காசோலையை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் யுவராஜா ஆகியோர் நேரடியாக ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டமான்சாரா நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு சுரேஸ் சிங், மண்டிப் சிங், உலு சிலாங்கூர் பிரான்ஸ், முரளி உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.









