கோலாலம்பூர்:
பெரனாங்கில் உள்ள பண்டார் தாசிக் கேசுமாவில் உள்ள பைடுரி அடுக்குமாடி குடியிருப்பில் குடிவரவுத் துறை மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையில் மொத்தம் 561 ஆவணமற்ற வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் வங்காளாதேசம், மியான்மர், நேபாளம், இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தியா, கம்போடியா, சியரா லியோன் மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் என குடிவரவுத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதியில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) இரவு 11 மணிக்கு இந்த நடவடிக்கை தொடங்கியது என்றும், மொத்தம் 752 வெளிநாட்டினரை ஆய்வு செய்து, அவர்களில் 561 ஆவணமற்ற வெளிநாட்டினரை கைது செய்தோம் என்றும் அவர் கூறினார்.
குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களில் 80 விழுக்காட்டினர் வெளிநாட்டினர் என்றும், அவர்கள் அங்கு மிக அடர்த்தியான வாஸ்வதாகவும் மற்றும் விரும்பத்தகாத வாழ்க்கை நிலைமைகளைக் கொண்டுள்ளதாலும் சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்கள் துன்பப்படுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.