ஓர் அணியைப் பிரதிநிதித்து ஒரே சமயத்தில் திடலில் ஆறு இறக்குமதி ஆட்டக்காரர்கள் களம் இறக்குவதற்கான அனுமதியை வைத்து சிறந்த அணியை உருவாக்குவதில் அனைத்துத் தரப்பினரும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்று சபா எஃப்சி அணி பயிற்றுநர் டத்தோ ஓங் கிம் சீவி கருத்துரைத்தார்.
வெளிநாட்டு ஆட்டக்காரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற அணிகளின் கோரிக்கையை எம்எஃப்எல் எனப்படும் மலேசிய கால்பந்து லீக் அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இறக்குமதி அல்லது உள்நாடு என கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் முதன்மை அணியில் இடம்பெறக்கூடிய 11 ஆட்டக்காரர்களைத் தேர்வு செய்வதில் அந்த அணிகளின் தேவையை மதிப்பீடு செய்வது அவசியமாகின்றது.
திடலில் ஆறு இறக்குமதி ஆட்டக்காரர்கள் களம் இறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய ஆட்டக்காரர்கள் உள்நாட்டினராகத்தான் இருப்பர். எனவே எனது அணிக்கு எது சிறந்தது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
மேலும் முதன்மை அணியை உருவாக்குவதில் சிறந்த தீர்வை குறித்தும் நான் ஆலோசிக்க வேண்டும். அது மட்டுமன்றி உள்நாட்டு விளையாட்டாளர்களும் களம் இறங்குவதைப் பார்க்க நானும் விரும்புகின்றேன் என்றார் அவர்.








