லாஸ் ஏஞ்சலிஸ்:
தென்கலிஃபோர்னியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் (பிப்ரவரி 6) கனமழை பெய்தது.
இதனால் அம்மாநிலத்தில் கூடுதல் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
பிப்ரவரி 5ஆம் தேதியன்று கலிஃபோர்னியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கனமழை பெய்தது.
இந்நிலையில் ஆரஞ்சு கவுன்ட்டி கடலோரப் பகுதியில் திடீர் வெள்ளம் மற்றும் கடல் அலை எழுச்சி ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சான்டியாகோவிலும் அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப் பகுதியிலும் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
லாஸ் ஏஞ்சலிசில் பிப்ரவரி 5ஆம் தேதி இரவு நிலவரப்படி கனமழை, பலத்த காற்று காரணமாக 250க்கும் அதிகமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. அந்நகரில் 380க்கும் அதிகமான நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிப்ரவரி 6ஆம் தேதியன்று லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் மட்டும் 156,000 பேர் மின்சாரம் இன்றி தவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.





















