சீனாவில் புதிய வகை உரு மாறிய கொரோனா (BF.7) வேகமாக பரவி வருகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகலும் பரவியுள்ளது. இந்தியாவிலும் 3 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா, இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் டெல்லியில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதைத் தொடர்ந்து நேற்று பிரதமர் மோடி கொரோனா நிலைமை பற்றி டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், இந்திய மருத்துவ சங்கமும் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இந்திய மருத்துவ சங்கத்தின் அறிவுறுத்தலில் திருமணம், அரசியல் நிகழ்வுகள், சமூக கூட்டங்கள் என பொதுஇடங்களில் மக்கள் தேவையின்றி கூட வேண்டாம் என்றும், சர்வதேச நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதோடு கொரோனா முன்னெச்சரிக்கை தவணைத் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.