மலாக்கா:
கிளந்தானின் ஷரியா சட்டத்தின்கீழ் இயற்றப்பட்ட 16 இஸ்லாமிய சட்டங்கள் மலேசிய அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பானவை என்றும், அவை செல்லுபடியாகாது என்றும் நேற்று (பிப்ரவரி 9) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்தச் சட்டங்களில் தகாத வழியில் பாலியல் உறவு கொள்ளுதல், பாலியல் ரீதியான துன்புறுத்தல், சடலத்துடன் பாலியல் உறவு கொள்வது ஆகியவை அடங்கும்.
உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது பேர் கொண்ட அமர்வில் 8-1 என்ற பெரும்பான்மையில் இந்தத் தீர்ப்பை வழங்கப்பட்டது.
இந்த முடிவை நீதிமன்றம் சுயமாக எடுத்ததாகவும் அரசாங்கத்தின் தலையீடு ஏதும் இல்லை என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
“மாநில முதல்வர், சட்டமன்றத்தில் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது அவை கூட்டரசு அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானவையாக இருந்தால், அவற்றை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.
அந்தச் சட்டங்கள் முரண்பாடுகளைக் கொண்டவை மற்றும், சட்டத்துக்குப் புறம்பானவை என்று நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்டால் அவை செல்லுபடியாகாது என்று தீர்ப்பளிக்கப்படும்,” என்று பிரதமர் சொன்னார்.





















