கோத்தா கினாபாலு:
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து கடந்த பிப்ரவரி 5 முதல் 15 வரை சபா மாநிலத்தில் நடத்தப்பட்ட சூதாட்டத்திற்கு எதிரான லிமாவ் நடவடிக்கையில் 35 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 20 முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் , அதில் 23 ஆண்களும் 12 பெண்களும் அடங்குவர் என்று சபா குற்றப் புலனாய்வுத் துறையின் மூத்த துணை ஆணையர் அஸ்மி அப்துல் ரஹீம் கூறினார்.
“குறித்த செயல்முறை காலம் முழுவதும், சோதனைக் குழு மொத்தம் 10 சோதனைகளை நடத்தியது, அதில் மொத்தம் 35 நபர்களை கைது செய்ததுடன், RM54,911 ரொக்கத்தை கைப்பற்றியது.
“மேலும், பல்வேறு மதிப்புகள் கொண்ட சில்லுகள், விளையாடும் சீட்டுகள், பகடை, மஜ்ஜோங் கற்கள், டோமினோக்கள் மற்றும் பட சின்னங்களுடன் கூடிய வெள்ளை துணி உள்ளிட்ட பல்வேறு சூதாட்ட உபகரணங்களையும் சோதனைக் குழுவினர் பறிமுதல் செய்தனர்,” என்று அவர் கூறினார்.
சீனப் புத்தாண்டைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் கும்பல்களால் நடத்தப்படும் சூதாட்ட நடவடிக்கைகளைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று அஸ்மி கூறினார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் திறந்த சூதாட்டச் சட்டம் 1957 இன் படி விசாரிக்கப்பட்டனர் என்று அவர் சொன்னார்.