(கே.ஆர். மூர்த்தி)
அலோஸ்டார், பிப். 24-
சுங்கைபட்டாணியில் கோல்காவலர் பயிற்சிப் பட்டறையில் 45 பேர் பங்கு பெற்றதாக ஏற்பாட்டுக்குழு பொறுப்பாளர்களில் ஒருவரான பயிற்றுநர் கோ. லலிதா அம்பிகை தெரிவித்தார்.
நேற்றுக் காலை 8.00 மணி முதல் காலை 10.30 மணி வரை சுங்கைபட்டாணி நகராண்மைக் கழகத்திற்குச் சொந்தமான மைதானத்தில் இந்தப் பயிற்சிப் பட்டறை நடந்தேறியது. இந்தப் பயிற்சி பட்டறையின் ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் கோலமூடா மாவட்ட கராத்தே கழகத்தின் தலைமைப் பயிற்றுநருமான சொக்கே மாஸ்டர் சுரேஸ் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.
கெடா மாநில கால்பந்து சங்கத்தின் ஆதரவோடு கெனாரி கிக் கால்பந்து கிளப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இப்பயிற்சியை அதன் செயலாளர் ஹாஹி டாலான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
கெடா மாநிலத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கோல் காவலர் பயிற்சியில் ஆண் – பெண் இருபாலரும் கலந்துகொண்டனர். இதில் 7 வயது முதல் 18 வயது மாணவர்களோடு பெரியவர்களும் கலந்துகொண்டு முழுமையான ஆதரவு வழங்கி பயிற்சியில் பங்கு பெற்றார்கள்.
மாணவர்கள் அனைவரும் கோலமூடா யான் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ், மலாய் ஆரம்பப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்தவர்களாவார்கள்.
இந்த நிகழ்விற்கு பிள்ளைகளை அழைத்து வந்த பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததாகவும் இது போன்ற பயிற்சிகள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஏற்பாட்டுக்குழுவினர் சார்பில் நற்சான்றிதழ் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டது. ஏற்பாட்டுக்குழுவினர் இந்த பயிற்சியினை சிறப்பான முறையில் வழி நடத்தியதாக அதன் தலைவர் சுரேஸ் மாரியப்பன் தெரிவித்தார்.