ரூ.3.66 கோடிக்கு 1,122 சடலங்களை விற்ற கேரள அரசு!

திருவனந்தபுரம்:

ரிமை கோரி பெற்றுக்கொள்ளாமல் இருந்த 1,122 சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு விற்பனை செய்து ரூ.3.66 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது கேரள அரசு.

விபத்து, குற்றச் சம்பவங்கள், இயற்கை மரணம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

அவர்களில் சிலரது உடல்களை அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் வாங்கிச் செல்கின்றனர். இதுபோல் உரிமை கோரப்படாத சடலங்கள் அரசு மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகளில் வைக்கப்படுகின்றன. இதனால், இடப்பற்றாக்குறை பிரச்சினையை மருத்துவமனை நிர்வாகங்கள் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், உரிமை கோரப்படாத சடலங்களை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சி அளிப்பதற்காக விற்பனை செய்து வருவாய் ஈட்ட கேரள அரசு முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, கேரள மாநிலத்தின் அரசு மருத்துவமனைகளில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் உரிமை கோரப்படாமல் இருந்த 1,122 சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு 3.66 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும் பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சடலங்களை வைத்து நேரடியாக கல்வி கற்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஒரு சடலத்தைப் பயன்படுத்தி 60 மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. அதனால், மனிதச் சடலங்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here