கோலாலம்பூர்:
கோலாலம்பூரிலுள்ள பசார் போராங்கில் வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் நேற்று முதல் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது, ஆனால் சமூக ஊடகங்களில் கூறப்படுவது போல இது கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல என்று, செந்தூல் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அஹ்மட் சுகர்னோ முகமட் ஜஹாரி தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மொத்த சந்தை பகுதியிலுள்ள உள்ள ஒரு வீட்டில் கணவன் மனைவி இடையே நடந்த சண்டையே தவறாக கொள்ளை என அக்காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது என்றும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
“தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் 20 மற்றும் 21 வயதுடைய இரண்டு மியான்மர் ஆண்களை போலீசார் கைது செய்துள்ளதாக” அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326 மற்றும் பிரிவு 148 இன் படி விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் மார்ச் 18 முதல் மார்ச் 23 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற தகவல்களை எளிதில் நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும் “சட்டத்தை மீறும் எந்தவொரு நபர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, பசார் போராங்கில் உள்ள ஒரு கடை கட்டிடத்தின் நடைபாதையில் வெளிநாட்டினர் என்று நம்பப்படும் ஆண்கள் குழு ஒன்று கூடுவதைக் காட்டும் நான்கு நிமிடங்கள் மற்றும் 55 வினாடிகள் நீடிக்கும் வீடியோ பதிவு , ‘ரோஹிங்கியாக்களின் வீட்டை இந்தியாக்காரர்கள் திருடியது (India curi Rohingya punya rumah)’ வாசகத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.