(எம். அன்பா)
செமினி, மார்ச் 23-
ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி அளவிலான குறுக்கோட்டப் போட்டியில் 266 மாணவர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர். மாணவர்களிடையே உடல், மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் விளையாட்டுத் துறையில் ஆர்வத்தை மேலோங்க செய்யும் வகையில் 3,4,5,6 ஆம் ஆண்டு வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட குறுக்கோட்டப் போட்டி மிக நேர்த்தியான முறையில் நடைபெற்றது என பள்ளி தலைமை ஆசிரியர் க. சுந்தரி கூறினார்.
நான்கு கிலோமீட்டர் தூர குறுக்கோட்டப் போட்டியில் பள்ளி மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நேற்று காலை 7.30 மணிக்கு ரிஞ்சிங் கிராமத்திலிருந்து தொடங்கப்பட்டு பள்ளி வளாகம் வரை நிறைவு செய்யப்பட்டது. பள்ளி மண்டபத்தில் போட்டிக்கான சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான குறுக்கோட்டப் போட்டி சுழற்கிண்ணத்தை சிவப்பு இல்ல மாணவர்கள் வெற்றிவாகை சூடினர்.
இக்குறுக்கோட்டப் போட்டியைப் பள்ளியின் தலைமையாசிரியர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். கற்றல் கற்பித்தல் ஆகியவற்றுடன் மாணவர்கள் விளையாட்டுத் துறைகளிலும் மிளிர வேண்டும் என்பதன் நோக்கத்தில் இத்தகைய விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் க. சுந்தரி, சிறப்பு பிரமுகர் சிலாங்கூர் நலன், தன்னார்வ அதிகாரமளிக்கும் சங்கம் (SELANGOR WAVE) ஆலோசகர் எம். ராஜன், பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர் தமிழரசு மலையாளம், உள்ளிட்ட பலர் பதக்கம், நற்சான்றிதழ், கேடயம் எடுத்து வழங்கினர்.
இந்தக் குறுக் கோட்டப் போட்டி கள் அனைத்து பணிகளையும் மிக நேர்த்தியாக பள்ளி யின் நிர்வாகத் துணைத் தலைமை யாசிரியர் திருமதி எஸ்.சாந்தி, மாணவர் நலத் துணைத் தலைமை ஆசிரியர் அ.சாரதி, இணைப்பாடத் துணைத் தலைமையாசிரியர் எம். மகேந்திரன், ஆசிரியர்கள் எஸ். புவனேஸ்வரன், எஸ். காளிதாஸ், எஸ். ரவீந்திரன் உள்ளிட்ட சக ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் அ. அண்ணாதுரை, செயலவை உறுப்பினர்கள், பெற்றோர், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.