தெலுக் இந்தான்:
நேற்று முன்தினம் ஜாலான் தெலுக் இந்தான்-பீடோர் 16 ஆவது கிலோமீட்டரில் நடந்த விபத்தில், மூன்று பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததுடன், மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். இதில் விபத்து ஏற்படுத்திய குறித்த வாகனமோட்டியை தாக்கியதாக நம்பப்படும் 4 பாகிஸ்தானியர்களை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.
இவ்வழக்கில் குற்றவியல் சட்டத்தின் 147வது பிரிவின்படி மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்கு குறித்த நால்வரையும் போலீஸ்தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்குமாறு, இன்று தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
அதற்கமைவாக மாவட்ட நீதிமன்ற நீதிபதி தி.அஷ்வினி, சந்தேக நபர்களை வரும் திங்கட்கிழமைவரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார்.
முன்னதாக வாகனமோட்டி மற்றும் நான்கு ஆடவர்கள் சம்பந்தப்பட்ட கைகலப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி மூலம், அந்த நான்கு சந்தேகப் பேரும் அடையாளம் காணப்பட்டதாக ஹிலிர் பேராக் மாவட்டக் காவல்துறை தலைவர் துணை ஆணையர் அமாட் அட்னான் பஸ்ரி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.




















