லஹாட் டத்து காவல்துறைத் தலைவர் துல்பஹாரின் இஸ்மாயிலின் 14 வயது மகள், தாமான் தபானக்கில் உள்ள அவர்களது வீட்டில் துப்பாக்கி சூடு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீஸ் படைத்தலைவர் ரஸாருதீன் ஹுசைனை பெர்னாமா தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்தச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவரின் 16 வயது சகோதரி, பள்ளியிலிருந்து திரும்பியபோது, இறந்தவரை வீட்டில் உள்ள ஒரு அறையில் கண்டார். பாதிக்கப்பட்டவரின் தந்தை சமீபத்தில் பதவி உயர்வு பெற்றதால் (லஹாட் டத்து காவல்துறைத் தலைவராக) இடமாற்றம் தொடர்பான விஷயங்களைக் கையாள கினபாத்தாங்கானில் இருந்தார் என்று ரஸாருதீன் கூறினார்.
ஏப்ரல் 1ஆம் தேதி லஹாட் டத்து போலீஸ் தலைவராக துல்பஹாரின் நியமிக்கப்பட்டார். இன்று காலை 9 மணிக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்று கூறிய ரஸாருதீன், சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்து வருவதாகவும் கூறினார். விசாரணை முடியும் வரை எந்தவித ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என பொதுமக்களுக்கும் அவர் வலியுறுத்தினார்.