இத்தவணை பிரிமியர் லீக் போட்டியில் 19ஆவது இடத்தில் உள்ல பர்ன்லி அணியுடன் மென்செஸ்டர் யுனைடெட் அணி சமநிலை கண்டதை அடுத்து அவ்வணியின் நிர்வாகி எரிக் தென் ஹாக் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
குறிப்பாக சொந்த அரங்கில் களம் இறங்கிய யுனைடெட் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற தவறியதால் அரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் கூச்சல் எழுப்பி தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் ஆட்டத்தில் சமநிலை கண்டது குறித்து தென் ஹாக் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அதே சமய்ம் இந்த ஆட்டத்தில் ஆட்டக்காரர்களை மாற்றியது குறித்து எழுந்த விமர்சனத்திற்கும் அவர் பதில் அளித்துள்ளார்.
தமது முடிவை தற்காத்து பேசிய தென் ஹாக், ரசிகர்களை பொறுமை காக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இளம் ஆட்டக்காரர்கள் காயப்படுவதை தவிர்க்கவே தாம் அம்முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எங்களிடம் நிறைய இளம் ஆட்டக்காரர்கள் உள்ளனர். அவர்களை வைத்துதான் அணியை கட்டமைக்கின்றோம்.
இளம் ஆட்டக்காரர்கள் முதலில் இவ்வணியில் ஒன்றிப்போக வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவை என்றார் அவர்.







