கோலாலம்பூர்:
கடந்த மே 5-11 வரையிலான 19வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME19) மொத்தம் 343 புதிய டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது இவ்வாண்டு பதிவான மொத்த டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கையை 2,338 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த காலகட்டத்தில் டிங்கு காய்ச்சலால் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹமட் ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.
குறித்த கால கட்டத்தில் டிங்கி காய்ச்சல் பரவும் அபாயமுள்ள இடங்களாக 60 பகுதிகள் இனங்கானப்பட்டுள்ளதாகவும், அவற்றில் மிக அதிகமாக சிலாங்கூர் மாநிலத்தில் 45 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து புத்ராஜெயாவில் 7, சரவாக்கில் 3, பினாங்கில் 2 மற்றும் கெடா, பேராக், மற்றும் நெகிரி செம்பிலானில் தலா ஒன்றும் அடங்கும் என்று, இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறினார்.





















