‘வெறுக்கத்தக்க பேச்சுகளின் மிக மோசமான வடிவம்’ – பிரதமர் மோடியை சரமாரியாக தாக்கிய மன்மோகன் சிங்

மக்களவைத் தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவுக்கு 2 தினங்கள் முன்பாக, பிரதமர் மோடிக்கு எதிராக சரமாரி தாக்குதலை தொடுத்துள்ளார் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்.

’நாட்டின் சொத்துக்களில் முஸ்லீம்களுக்கான உரிமை’ குறித்து மன்மோகன் சிங் பேசியதை சர்ச்சையாக்கியதில், நடப்பு மக்களவைத் தேர்தல் பிரச்சார களத்தை பரபரப்பாக்கினார் பிரதமர் மோடி. மன்மோகன் சிங் பேச்சையும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் இணைத்து மோடி முன்னெடுத்த வாதங்கள், வட இந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு வரவேற்பு பெற்றுத் பெற்றது; காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியது. அப்போதே மன்மோகன் சிங் தனது தரப்பிலான விளக்கத்தை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

சற்றே தாமதமாக மக்களவைத் தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவுக்கு நெருக்கத்தில், மோடிக்கு எதிராக சரமாரி தாக்குதலை தொடுத்திருக்கிறார் மன்மோகன் சிங். இந்திய மக்களுக்கான கடிதம் என்ற பெயரில் மன்மோகன் சிங் வெளியிட்டிருக்கும் அறிக்கை, மோடிக்கு எதிரான அவரின் இதுவரையில்லாத தாக்குதலாக அமைந்துள்ளது. அதிலும் ’கடந்த காலங்களில் எந்த பிரதமரும் பயன்படுத்தாத வெறுப்பூட்டும் பேச்சுக்களை மோடி பயன்படுத்தியதாக’ மோடி மீது மன்மோகன் சிங் பாய்ந்துள்ளார்.

”இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் அரசியல் உரைகளை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மோடி மிகவும் கொடூரமான வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார். அவை முற்றிலும் பிரிவினையை ஏற்படுத்தும். பொதுச் சொற்பொழிவின் கண்ணியத்தையும், அதன் மூலம் பிரதமர் அலுவலகத்தின் மீதான ஈர்ப்பையும் மோடி குறைத்திருக்கிறார்.

இந்தியா ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. கடைசிக்கட்ட வாக்கெடுப்பில், ஒரு சர்வாதிகார ஆட்சியின் தாக்குதல்களில் இருந்து ஜனநாயகம், நாட்டின் அரசியலமைப்பு ஆகியவற்றை பாதுகாப்பதற்கான இறுதி வாய்ப்பு நாட்டு மக்களுக்கு உள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பஞ்சாபைக் கேவலப்படுத்துவதில் பாஜக எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லைகளில் மாதக்கணக்கில் போராடினார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக லத்திகளும் ரப்பர் தோட்டாக்களும் போதாது என்பது போல, நாடாளுமன்ற உரைகளிலும் ஒரு பிரதமரே விவசாயிகளை இழிவுபடுத்தினார்.

கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம் நினைத்துப் பார்க்க முடியாத கொந்தளிப்பைக் கண்டுள்ளது. பணமதிப்பிழப்பு பேரழிவு, குறைபாடுள்ள ஜிஎஸ்டி மற்றும் கொரோனா தொற்றுநோய்களின் மத்தியில் தவறான நிர்வாகம் ஆகியவை ஒரு பரிதாபகரமான சூழ்நிலையை விளைவித்துள்ளன.

பாஜக அரசு நமது ஆயுதப்படைகள் மீது தவறான நோக்கத்தில் அக்னிவீரர் திட்டத்தை திணித்தது. மேலும், தேசபக்தி, வீரம் மற்றும் சேவையின் மதிப்பு நான்கு ஆண்டுகள் மட்டுமே என பாஜக நினைக்கிறது. இது அவர்களின் போலி தேசியவாதத்தை காட்டுகிறது” என்று சரமாரி தாக்குதலை மோடி மற்றும் அவரது தலைமையிலான பாஜக ஆட்சிக்கு எதிராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here