மலேசிய விமான நிலையங்கள் நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்ந்து மலேசியர்களின் கைகளில்: பிரதமர்

கோலாலம்பூர்:

மலேசியாவின் விமான நிலைய நிறுவனத்தின் நிர்வாகமும் உரிமையும் மலேசியர்களின் கைகளில் தொடர்ந்து இருக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அதனைத் தனியார் நிறுவனமாகப் பெற்றுக்கொள்ளும் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் கருத்து வந்துள்ளது.

அந்தத் திட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளடங்குவதால், அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் எழுந்துள்ளன.

மலேசியாவின் ‘கஸானா நேசனல்’ சொத்து நிதியும், அரசு ஓய்வூதியமான ‘ஊழியர்கள் சேமநிதி’யும் வழிநடத்தும் கூட்டமைப்பு ஒன்று, ‘மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தைத் தனியார் நிறுவனமாகப் பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்தை மே 15ஆம் தேதி அறிவித்தது.

ஒப்பந்தத்தின்படி, அந்த நிறுவனத்தின் மதிப்பு 3.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும்.

அபு தாபி முதலீட்டு ஆணையம், அமெரிக்க நிதி நிர்வாக நிறுவனமான ‘பிளேக்ராக்’ பெற்றுக்கொள்ளவிருக்கும் உலக உள்ளமைப்புப் பங்காளிகள் ஆகியவை அந்தக் கூட்டமைப்பில் அடங்கும்.

‘மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் திட்டம் குறித்து, ஆளுங்கட்சியிலிருந்தும், எதிர்க்கட்சிகளிடமிருந்தும் குறைகூறல்களும் ஆர்ப்பாட்டங்களும் எழுந்துள்ளன.

பாலஸ்தீன மக்களுக்கு அதிக ஆதரவு தெரிவிக்கும் முஸ்லிம்கள் பெரும்பான்மையைக் கொண்டுள்ள நாடு மலேசியா.

காஸாவில், ஹமாஸ் போராளிக் குழுவுக்கு எதிராகப் போர் தொடுத்துவரும் இஸ்ரேலில், ‘பிளேக்ராக்’ முக்கிய முதலீடுகள் செய்திருப்பது குறித்து குறைகூறல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஒப்பந்தம் செய்துமுடிக்கப்பட்டதும், ‘கஸானா’, ‘ஊழியர்கள் சேமநிதி’ ஆகியவை வைத்திருக்கும் 70 விழுக்காட்டுப் பங்கின் மூலம், ‘மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் உரிமை மலேசியாவின் கைகளில் தொடர்ந்து இருக்கும் என்று அன்வார் கூறினார்.

“‘மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியும் மலேசியர்களாக இருப்பார்கள்,” என்றார் அவர்.

தனியார்மயமாக்கம் தொடரும் என்று கூறிய அவர், ‘பிளேக்ராக்’ அந்த ஒப்பந்தத்தில் இடம்பெறாது என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here