ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற ஆடவரின் மோட்டார் சைக்கிள் எருமை மாட்டில் மோதியதில் உயிரிழப்பு

ஜோகூர் பாரு:

ஜோகூரில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற ஆடவரின் மோட்டார் சைக்கிள் எருமை மாட்டின் மீது மோதியதைத் தொடர்ந்து, அந்த 53 வயது மலேசியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) அதிகாலை 3.40 மணியளவில் ஜாலான் சுங்கை திராமில் நிகழ்ந்ததாக ஸ்ரீஅலாம் மாவட்ட காவல்துறை தலைவர் முஹமட் சொஹைமி இஷாக் கூறினார்.

“தெப்ராவ் என்னும் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தபோது அந்த வழித்தடத்தில் எருமை மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது.

அச்சம்பவத்தில் கடுமையாகக் காயமுற்ற ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,” என்று நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.

உயிரிழந்த ஆடவரின் சடலம் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் கார் ஒன்றில் இருந்த கேமராவில் அந்தச் சம்பவம் பதிவானதுடன், அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்பட்டது.

இருள் சூழ்ந்த சாலையில் எருமையுடன் மோட்டார் சைக்கிள் மோதியதும் அதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் உடைந்து சிதறியதும் அந்தக் காணொளியில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here