விநாயகருக்கு அருகம்புல் படைப்பது ஏன்?

விநாயகருக்கு அருகம்புல் படைப்பதற்கு புராணங்களில் பலவித கதைகள் சொல்லப்படுகிறது. அதாவது, ஒருமுறை தேவர்களை துன்புறுத்தி வந்த அசுரனை விநாயகப் பெருமான் விழுங்கினார். இதனால் அவருக்கு வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டது. விநாயகரின் உடலை குளிர செய்வதற்காக தேவர்களும், பூதகணங்களும் என்னென்னவோ செய்தும் அவரின் உடல் எரிச்சல் தணியவில்லை. இறுதியாக துர்வாச முனிவர், அருகம்புல்லை விநாயகரின் தலையில் வைத்தார். அடுத்த நொடியே விநாயகரின் வயிற்று எரிச்சல் நீங்கி, அவரது உடலும் மனமும் குளிர்ந்தது. அன்று முதல் விநாயகரின் மனதை குளிர வைக்க, அருகம்புல் படைக்கும் வழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

மற்றொரு புராண கதைகளின் படி நந்தி தேவர் தான், விநாயகருக்கு முதன் முதலாக அருகம்புல் படைத்து வழிபட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஒருமுறை கைலாயத்தில் சிவ பெருமானும், பார்வதியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நந்தி தேவரிடம் பார்வதி, இந்த விளையாட்டில் யார் வெற்றி பெறுவார்கள் என கேட்டார். அதற்கு நந்தி தேவர், இதில் என்ன தேவி சந்தேகம், எம்பெருமான் சிவபெருமான் தான் வெற்றி பெறுவார் என்றார். ஆனால் அந்த விளையாட்டின் முடிவில் பார்வதி தேவி தான் வெற்றி பெற்றார்.

நந்திக்கு பார்வதி அளித்த சாபம்

அதே சமயம் நந்தியின் கருத்தால் கோபமடைந்த பார்வதி தேவி, எந்த விஷயத்தையும் நன்கு ஆராயாமல் ஒரு தலைபட்சமாக சிவ பெருமான் வெற்றி பெறுவார் என சொன்ன நந்தி, சிவ பெருமானிடம் இருந்து விலகி இருக்கும் படி சாபம் அளித்தார். பார்வதியின் இந்த சாபத்தால் பதறிப் போன நந்தி, தன்னுடைய செயலுக்காக வருந்தி, சாபத்தை திரும்பப் பெறும் படி முறையிட்டார். சிவ பெருமானும் நந்தியால் என்னை நீங்கி இருக்க முடியாது. என்னாலும் நந்தி இல்லாமல் இருக்க முடியாது என்றார். அதனால் சாபத்தை திரும்பப் பெறும் படி சிவ பெருமானும் கேட்டுக் கொண்டார்.

அருகம்புல்லால் மனம் மகிழ்ந்த விநாயகர்

இருவரும் முறையிட்டதால் மனம் இறங்கிய பார்வதி, தன்னுடைய மகன் கணபதியை மனம் மகிழும் படி செய்தால் இந்த சாபத்தில் இருந்து விடுபடலாம் என வழிகாட்டினார். அதனை ஏற்ற நந்தியும் விநாயகருக்கு பிடித்தமான லட்டு, பழங்கள், மோதகம், இனிப்புகள் என பலவிதமான உணவுப் பொருட்களை சாப்பிடக் கொடுத்தார். இருந்தாலும் கணபதியின் மனம் மகிழவில்லை. இப்படியே பல நாட்கள் கடந்தது. இருந்தாலும் கணபதி மனம் திருப்தி அடையவோ, மகிழ்வடையவோ இல்லை. ஒருநாள் நந்தி புற்களை மேய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கணபதி, இன்று நீ எனக்கு சாப்பிடுவதற்கு எதுவுமே கொடுக்கவில்லையே என கேட்டார். அதற்கு சிறிது தயங்காமல் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த அருகம் புற்களை கணபதிக்கு கொடுத்தார். நந்தியின் இந்த பக்தியால் மனம் மகிழ்ந்தார் கணபதி. இதனால் நந்திக்கு, பார்வதி அளித்த சாபமும் நீங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here