‘ஏஞ்சல்ஸ் ட்ரம்பெட்’ பழத்தைச் சாப்பிட்ட இருவர் பலி, 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

 இந்தோனேசியாவின் தெற்கு கலிமந்தானில் ‘ஏஞ்சல்ஸ் ட்ரம்பெட்’ பழத்தைச் சாப்பிட்டதாக நம்பப்படும் இரண்டு பேர் நச்சுத்தன்மை காரணமாக உயிரிழந்தனர். ஐம்பது பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்று அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதில் பாதிக்கப்பட்டவர்கள் வன்முறையுடன் நடந்துகொண்டதுடன் பிரம்மை பிடித்தவர்போல செயல்பட்டனர். சிலர் தங்களுக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாகக் கூறிக் கொண்டனர்.

அண்டாரா செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களின் வயது 22 முதல் 50 வரையிலாகும். அவர்கள், தெற்கு கலிமந்தானில் உள்ள பல்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள். பழத்தைச் சாப்பிட்ட பலர் பிரம்மை உணர்வுடன் நடந்துகொண்ட காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. உதாரணமாக, இளையர் ஒருவர் தன்னை கடவுள் என்று கூறிக் கொண்டு முன்பின் அறியாதவர் வீட்டில் நுழைந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

காட்சிகளைப் படம் பிடித்து பதிவிட்ட குடியிருப்பாளர் ஒருவர், “அதிகாலையில், தன்னைக் கடவுள் என கூறிய ஒருவர் போதையில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து, வெறித்தனமாக நடந்துகொண்டார்,” என்றார். பரபரப்பான போக்குவரத்தின் மத்தியில் ஒரு இளையர் அமர்ந்திருப்பதையும், மற்றொருவர், மேகங்களுக்கு இடையே தன்னால் நீந்த முடியும் என்று கூறி குளத்தில் இருப்பதையும் காணொளிகள் காட்டுகின்றன. இதுவரை நான்கு நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜூலை 7, 8 தேதிகளில் இருவர் இறந்துவிட்டனர். சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here