நீலாய்:
இல்லாத இணைய முதலீட்டு திட்டத்தை நம்பி, நீலாயை சேர்ந்த ஒரு பெண் தனது சேமிப்பில் கிட்டத்தட்ட RM3.5 மில்லியனை இழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 60 வயதான பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னர் நேற்று (மார்ச் 20) போலீசில் புகார் செய்ததாக நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர், அப்துல் மாலிக் ஹாசிம் கூறினார்.
“அந்நிய செலாவணி மூலம் அதிக இலாபம் ஈட்டுவதற்கான ஒரு முதலீட்டு திட்டம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து தனக்கு குறுஞ்செய்தி வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
“தன்னுடன் தொடர்பு கொண்ட நபரை குறித்த பெண் நம்பி, 60 பரிவர்த்தனைகள் மூலம் பல கணக்குகளுக்கு பணத்தை மாற்றினார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
பின்னர், குறித்த முதலீட்டுத் திட்டத்தை வழங்கும் இணையதளத்தைப் பார்க்க முடிவு செய்தபோதுதான், அவர் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்ட பெண் உணர்ந்ததாக அப்துல் மாலிக் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.