டாக்கா:
வங்கதேசத்தில் பணியில் இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட போராட்ட வன்முறையில் 36 பேர் கொல்லப்பட்டனர். டி.வி., நிலையம் எரிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் வன்முறையாக மாறியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டது.
வங்கதேசம் – பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை வங்கதேசத்தில் இருந்தது.
கடந்த 2018ல் மாணவர்கள் போராட்டத்தால் இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை துவங்கினர்.
அமைதி காக்குமாறு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.





















