குரு பூர்ணிமா நாளில் குருமார்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களை நினைவு கூர்ந்து, அவர்களை போற்றி வழிபடும் வழிபடும் நாளாக குறிப்பிடப்படுகிறது. இந்த நாளுக்கு என்ன சிறப்பு, எதற்காக இந்த குறிப்பிட்ட நாளில் ஆசிரியர்களை வணங்க வேண்டும், இந்த நாளுக்குரிய வரலாறு என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு வரும் குரு பூர்ணிமாவிற்கு என்ன சிறப்பு என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்துக்கள் மட்டுமின்றி புத்த மதத்தினர், ஜயினர்கள் ஆகியோரும் மிக புனிதமான நாளாக கொண்டாடுவது குரு பூர்ணிமா தினமாகும். ஆஷாட மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்தில் குரு பூர்ணிமா பண்டிகை கொண்டாடப்படுகிறது. குரு பூர்ணிமா மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுவதற்கு மூன்று மதங்களிலும், பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் பொதுவாக இது குரு- சிஷ்யர்களின் உறவை போற்றும் உன்னத நாளாக போற்றப்படுகிறது.
புத்த மதத்தை தோற்றுவித்த கெளதம புத்தரின் நினைவாக இந்த நாள் போற்றப்படுவதாக புத்த மதம் சொல்கிறது. அதாவது 11ம் நூற்றாண்டில், ஆஷாட மாதத்தின் பெளர்ணமி நாளில் தான் புத்தர், சாரநாத் கிராமத்தில் தன்னுடைய ஐந்து சீடர்களில் முதல் சீடரை பெற்றதாக சொல்லப்படுகிறது. புத்த கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்ற பிறகு, புத்தர் முதன் முதலாக புத்த கயாவில் இருந்து வாரணாசிக்கு வந்தது இந்த நாளில் தான் என்றும் சொல்லப்படுகிறது. ஞானம் பெற்று திரும்பிய ஐந்தாவது வாரத்தில் சாரநாத்திற்கு வந்த போது தான் தன்னுடைய முதல் சீடரை பெற்றதாக புத்த மதம் சொல்கிறது.
வேத வியாசரின் பிறந்த நாளையே நாம் குரு பூர்ணிமா பண்டிகையாகக் கொண்டாடுவதாக சொல்லப்படுகிறது. இந்துக்களின் மிக முக்கியமான, புவிதமான நூல்களான மகாபாரத காவியத்தையும், பாகவத புராணத்தையும் எழுதியவர் வேத வியாசர் தான். வாய்மொழியாக மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்த வேதங்களை, எழுத்து வடிவத்திற்கு முதன் முதலில் கொண்டு வந்தவர் வேத வியாசர் தான். வேதங்களையும் சாஸ்திரங்களையும் தொகுத்து, உலகிற்கு அளித்தவர் வேத வியாசர் தான். அதனால் தான் இவரை குருவிற்கு எல்லாம் மேலான சிறப்பான குருவாக இந்து மதம் போற்றுகின்றனது. இவரே குரு-சிஷ்ய கலாச்சாரத்தின் அடையாளம் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இவரது பிறந்த நாளான ஆஷாட மாதத்தில் வரும் பெளர்ணமியை வியாச பூர்ணிமா என்றும் அழைப்பதுண்டு
ஜயினர்கள், குரு பூர்ணிமா திருநாளை திரினோக் குக பூர்ணிமா என அழைக்கிறார்கள். கைவல்யம் அடைந்த பிறகு மகாவீரர், கெளதம சுவாமியை தன்னுடைய முதல் சிஷ்யராக பெற்றார். அவர் நிகழ்த்திய முதல் ஞான பிரசங்க உரையை ஆற்றிய பிறகு தன்னுடைய சிஷ்யருக்கு போதனைகளை வழங்கினார்.
இந்த ஆண்டு குரு பூர்ணிமா ஜூலை 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஜூலை 20ம் தேதி மாலை 06.10 மணி முதல், ஜூலை 21ம் தேதி மாலை 04.51 வரை பெளர்ணமி திதி உள்ளது. அன்றைய தினம் உத்திராடம் நட்சத்திரமும் இணைந்து வருவது இன்னும் சிறப்பானதாகும். உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன் ஆவார். இவரே தலைமை பண்பு, அதிகாரம், உயர் பதவி ஆகியவற்றிற்கு காரணமான கிரகம். அதே போல் உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய கடவுள் ஆஞ்சநேயர். இவர் பேச்சாற்றல், ஞானம் ஆகியவற்றில் வல்லவர்.
குரு அல்லது ஆசிரியர் என்பவர் நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவர் என்பதை உணர்த்துவதே குரு பூர்ணிமா பண்டிகை கொண்டாடுவதன் நோக்கமாகும். ஆசிரியர் அல்லது குரு என்பது வெறும் பாடம் கற்றுக் கொடுப்பவர் மட்டுமில்ல, அதையும் தாண்டி ஆசிரியரின் பங்கு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் நாளாகும். இது குரு-சிஷ்யர் உறவின் உன்னதத்தை விளக்கும் நாளாகவும் குறிப்பிடப்படுகிறது.



















