‛ரகு தாத்தா’ படம் ஹிந்தி திணிப்பு பற்றிய படமல்ல: கீர்த்தி சுரேஷ்

ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘ரகு தாத்தா’. ‛தி பேமிலி மேன்’, ‘பார்ஸி’ ஆகிய இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காமெடி டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கீர்த்தி சுரேஷ் பேசியதாவது: நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ” சந்தோஷமான தருணம் இது. இயக்குநர் சுமனிடம் கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, நடிக்கிறேன் என சம்மதம் சொன்னேன். இதற்கு முன்னால் இப்படி ஒரு திரைக்கதையை நான் கேட்டதில்லை. அதனால் ‘ரகு தாத்தா’வில் நடிக்கிறேன் என்று சொன்னேன். அதே சமயம் எனக்குள் இந்த திரைப்படத்தை எப்படி ரசிகர்களை திரையரங்கத்திற்குள் இழுத்து வர முடியும்? என்ற தயக்கம் இருந்தது. அதனை இயக்குனர் சுமன், தயாரிப்பாளர் விஜய் ஆகியோர் நம்பிக்கை அளித்து தயக்கத்தை உடைத்தனர்.

ரகு தாத்தா – ஒரு முழுமையான காமெடி டிராமா. இந்தப் படம் ஹிந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது. எந்த மாதிரியான திணிப்பு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் படத்தில் சிறிய அளவில் கருத்து சொல்ல முயற்சித்திருக்கிறோம். ஆனால் அது பிரசாரமாக இருக்காது. இது படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு புரியும். பொதுவாகவே திணிப்பை பற்றி பேசியிருக்கிறோம். அதில் கதையை தொடர்பு படுத்தும் வகையில் ஹிந்தியை ஒரு உதாரணமாக சொல்லி இருக்கிறோம்.

இந்த படம் எந்த ஒரு அரசியலையோ எதிர்மறையான விசயங்களையோ சொல்லவில்லை. இது ஒரு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படம். படத்தை பார்க்க திரையரங்கத்திற்கு வருகை தருபவர்கள் படத்தை பார்த்து ஜாலியாக சிரித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பலாம். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here