கோலாலம்பூர்:
அண்மையில் நாட்டை உலுக்கிய யுனிவர்சிட்டி பெண்டிக்கான் சுல்தான் இட்ரிஸ் முன்னாள் மாணவி நூர் ஃபரா கர்தினி அப்துல்லாவின் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார்.
மேலும், வழக்குக்கான ஆதாரங்களை தேடும் பணியையும் போலீசார் முடித்துள்ளனர் என்றார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை அறிக்கை அடுத்த நடவடிக்கைக்காக துணை அரசு வழக்கறிஞரிடம் (TPP) சமர்ப்பிக்கப்படும்.
25 வயதான நூர் ஃபரா கர்தினி ஜூலை 10 ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்டது, ஜூலை 15 ஆம் தேதி மாலை 6 மணியளவில் உலு சிலாங்கூரில் உள்ள கம்போங் ஸ்ரீ கிளெடாங்கில் உள்ள செம்பனை தோட்டத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் நடத்தப்பட்ட விசாரணையில் உதவுவதற்காக 26 வயது போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
























