ஆடி மாத தெய்வ வழிபாடு

ஆடி மாதம் என்றாலே அனைவரும் அம்மன் கோவில்களுக்கு சென்று தான் வழிபட வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடி மாதம் அம்மன் மாதம் என்பதால் அம்மன் கோவிலுக்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என்பது கிடையாது. நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பலவிதமான பிரச்சனைகள் தீருவதற்கு ஏற்ற மாதம் ஆடி மாதமாகும். அதனால், ஆடி மாதம் நமக்கு என்ன பிரச்சனை தீர வேண்டுமோ அதற்குரிய கோவிலுக்கு சென்று, குறிப்பிட்ட முறையில் வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஆடி மாதத்தில் எந்த தெய்வத்தின் கோவிலுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் எந்த தெய்வத்தின் கோவிலுக்கு எந்த கிழமையில் செல்ல வேண்டும், அந்த தெய்வத்தை என்ன மந்திரம் சொல்லி எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு செல்வது சிறப்பான பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் எந்த பிரச்சனை தீர எந்த தெய்வத்தின் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். கோவிலுக்கு காலை 6 முதல் 8 மணிக்குள்ளான நேரத்தில் சென்று மட்டுமே வழிபட வேண்டும்.

ஆடி ஞாயிறு :

ஆடி ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மன் கோவிலுக்கு சென்று, அம்பிகையை தரிசிக்க வேண்டும். பிறகு ஓம் சக்தி என அன்னையின் மந்திரத்தை சொல்லிய படியே 11 முறை அம்மனின் சன்னதியை சுற்றி வர வேண்டும். அதற்கு பிறகு அம்மனின் சன்னதிக்கு முன்பு சென்று அமர்ந்து, நம்முடைய கோரிக்கை அல்லது வேண்டுதல் எதுவோ அதை சொல்லி முறையிட வேண்டும். அந்த வேண்டுதல் நிறைவேற அருள் செய் என வேண்டிக் கொள்ள வேண்டும். கோவிலை சுற்றி வந்த பிறகு தான் நம்முடைய வேண்டுதலை அம்மனிடம் முன் வைக்க வேண்டும். இப்படி வழிபடுவதால் திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கும்.

ஆடி திங்கள்

ஆடி மாதம் திங்கட்கிழமையில் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று, “ஓம் நமச்சிவாய நமோ நமஹ” என்ற மந்திரத்தை சுவாமி முன் நின்று 18 முறை சொல்ல வேண்டும். அதற்கு பிறகு 5 முறை சுவாமி சன்னதியை மட்டும் சுற்றி வர வேண்டும். மற்ற தெய்வங்களை சுற்றக் கூடாது. சிவனை மட்டும் 5 முறை சுற்றி வந்தால் முன்வினை பாவங்கள் நீங்கி, மனதை அழுத்தும் கவலைகள் நீங்கும்.

ஆடி செவ்வாய்

ஆடிச் செவ்வாய் கிழமைகளில் வள்ளி தெய்வானை சமேத முருகன் கோவிலுக்கு சென்று, 9 முறை வலம் வர வேண்டும். ஓம் சரவண பவ மந்திரத்தை சொல்லியபடி 9 முறை சுற்றி வர வேண்டும். அதற்கு பிறகு சுவாமி முன் அமர்ந்து நம்முடைய கோரிக்கையை சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் பிரச்சனை, கணவன்-மனைவி பிரிந்து இருக்கிறார்கள், கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை, புரிதல் இல்லை என்கிறவர்கள் ஆடிச்செவ்வாயில் முருகனை இப்படி வழிபடலாம்.

ஆடி புதன்

ஆடி புதன் கிழமையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று, முதலில் கொடி மரத்தை வணங்கி விட்டு, உள்ளே சென்று, கோவிந்தா…கோவிந்தா என சுவாமியின் திருவடிகளை பார்த்து சொல்லி விட்டு, கோவிந்தா…ஓம் நமோ நாராயணா மந்திரத்தை சொல்லிய படியே 7 முறை சுற்றி வர வேண்டும். பிறகு சுவாமி சன்னதிக்கு முன் அமர்ந்து வேண்டுதலை சொல்லி வழிபட்டால் கடன் பிரச்சனை போன்ற பணம் தொடர்பான பிரச்சனைகள், நெருக்கடிகள் நீங்கும்.

ஆடி வியாழன்

ஆடி வியாழக்கிழமையில் நவகிரகங்களில் இருக்கும் குரு அல்லது தட்சிணாமூர்த்தி அல்லது பெருமாள் கோவிலில் இருக்கும் ராமானுஜர் போன்ற குருமார்கள், மகான்கள் ஆகியோரின் கோவிலுக்கு சென்று 3 முறை வலம் வாருங்கள். அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை சொல்லி சுற்றி, வந்த பிறகு சுவாமியிடம் வேண்டுதலை சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி வழிபட்டால் குழந்தைகள் நன்கு படிப்பார்கள். அவர்களின் நினைவாற்றல் பெருகும். வாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஆடி வெள்ளி

ஆடி வெள்ளி என்றாலே மங்கலகரமான நாளாகும். பணம் மற்றும் மன நிம்மதி வேண்டும் என்கிறவர்கள் ஆடி வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். ஓம் நமோ மகாலட்சுமியே நமஹ என்ற மந்திரத்தை சொல்லிய படியே, 3 முறை வலம் வர வேண்டும். பிறகு மகாலட்சுமியின் பாதங்களை பார்த்து நம்முடைய கோரிக்கைகளை சொல்லி வழிபட வேண்டும்.

ஆடி சனிக்கிழமை

சனியால் பலவிதமான பிரச்சனைகள், கஷ்டங்களை சந்திப்பவர்கள் ஆடி சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் என்ற மந்திரத்தை சொல்லிய படியே 12 முறை சுற்றி வர வேண்டும். பிறகு என்னுடைய கஷ்டங்களை எல்லாம் தீர்த்து, நல்ல வழி காட்டு ஆஞ்சநேயா என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here