வேப்பஞ்சேலை அணிந்து வழிபடுவதற்கு இது தான் காரணமா ?

ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகவும், பெண்கள் விரதம் இருந்து வழிபடுவதற்கு ஏற்ற மாதமாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் எத்தனையோ விரதமான வழிபாடுகள், விரத முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்று பெண்கள் அம்மன் கோவில்களில் வேப்பஞ்சேலை உடுத்தி, கையில் அக்னி சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து வழிபடுவதாகும். குறிப்பாக பெரியபாளையம் போன்ற புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் இந்த வேப்பஞ்சேலை வழிபாடு மிக முக்கியமான வழிபாடாக உள்ளது. இந்த வழிபாடு எதற்காக செய்யப்படுகிறது, இதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வேப்பிலைக்கும் குழந்தைக்குமான தொடர்பு :

கூழுக்கு மிஞ்சிய உணவும் இல்லை; வேப்பிலைக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்பார்கள். மாரியம்மனை நோய்கள் தீர்க்கும் தெய்வமாக சொல்லுவதால் கூழ், வேப்பிலை இரண்டும் மாரியம்மனுக்கு உரியதாக சொல்லப்படுகிறது. வேப்பிலை கசப்பு தன்மை கொண்டது என பலரும் அதை ஒதுக்குவது உண்டு. ஆனால் வேப்பிலை என்பது சுக்கிரனின் அம்சமானதாகும். வாழ்வில் மகிழ்ச்சியை, சுக போகம், மனநிறைவான வாழ்க்கை ஆகியவற்றை தரும் கிரகமாக சுக்கிரன் சொல்லப்படுகிறார். அதே போல் ஜோதிட ரீதியாக உடலில் உருவாகும் உயிர் அணுக்களுக்கு காரணமான கிரகமும் சுக்கிரன் தான்.

யாரெல்லாம் வேப்பஞ்சேலை பரிகாரம் செய்யலாம்?

நீண்ட நாட்களாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை பேறு ஏற்படுவதற்கு தடை இருக்கும் உடல் நோய்களை உடையவர்கள், கணவரின் ஆயுள் நீடிக்க வேண்டும் என்கிறவர்கள் இந்த வேப்பஞ்சேலை பரிகாரத்தை செய்வது உண்டு. வேப்பஞ்சேலை கட்டியவர்கள் கையில் அக்னி சட்டி வரும் போது, கையில் உள்ள நரம்புகள் வழியாக அதன் வெப்பம் உடலுக்குள் சென்று உடலில் வெப்பத்தன்மை சமநிலை அடைவதுடன், நரம்புகள் பலப்படும். நரம்புகள் தூண்டப்பட்டு, பலவிதமான உடல் பிரச்சனைகள் சரியாவதாக சொல்லப்படுகிறது.

வேப்பஞ்சேலை பரிகார முறை :

வேப்பஞ்சேலை வேண்டுதல் செய்யும் பெண்கள் 3 அல்லது 9 முறை கையில் அக்னி சட்டி ஏந்தி கோவிலை வலம் வரலாம். வேப்பஞ்சேலை வேண்டுதலை நிறைவு செய்த பிறகு அவர்களின் கைகளால் அம்மனுக்கு மாவிளக்கு செய்து, அதில் நெய் தீபம் ஏற்றி, அம்மனுக்கு படைத்து வழிபட வேண்டும். பிறகு அந்த பிரசாதத்தை முதலில் தான் சாப்பிட்டு விட்டு, பிறகு மற்றவர்களுக்கும் பிரசாதமாக கொடுக்க வேண்டும். நோய்களை தீர்க்கும் தன்மை கொண்ட கிரகம் சந்திரன் என்பதால் பெண்கள், ஆடி மாத திங்கட்கிழமை அல்லது ஆடி வெள்ளிக்கிழமைகளில் வேப்பஞ்சேலை பரிகாரத்தை செய்வது சிறப்பானதாகும். ஆன்மிக மற்றும் அறிவியல் ரீதியாக பல நன்மைகளை தரக் கூடிய பரிகாரம் என்பதால் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் அவர்களின் குறைகள் தீரும் என்பது நம்பிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here