புரட்டிப்போட்ட நிலச்சரிவு.. வயநாட்டுக்கு யாரும் வராதீங்க.. கேரள முதல்வர் பினராயி விஜயன்!

வயநாடு: கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வயநாடு மாவட்டத்துக்கு மீட்புப் படையினரைத் தவிர வேறு யாரும் வர வேண்டாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மீட்புக் குழுவினர் உள்ளிட்டோருடனான அவசர ஆலோசனையைத் தொடர்ந்து கேரள முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் அடுத்தடுத்து 3 அதிபயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வயநாடு, சூரல்மலை, முண்டக்கை, மலப்புரம் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 150 ஐ கடந்துள்ளது. காட்டாற்று வெள்ளம் அடித்துச் செல்லப்பட்டதில் 400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக மீட்புப் பணிகள் அதிதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில ஊர்கள் இருந்ததற்கான தடயமே இல்லாமல் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களும் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் அப்பகுதி முழுவதும் மரண ஓலமே கேட்கிறது.

முண்டக்கை, மேம்பாடி பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 163 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 200க்கும் மேற்பட்டோர் மண்ணுக்கு அடியில் சிக்கியிருப்பதால் ராணுவம், விமானப் படை, கடற்படை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்பு வீரர்கள், காவலர்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முண்டக்கை, மேம்பாடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் குழுவினருடன் அவசர ஆலோசனையில் இன்று காலை ஈடுபட்டார். அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த அரசியல் கட்சிகளுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்க அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், வயநாட்டுக்கு மீட்புப் படையினரைத் தவிர வேறு யாரும் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அப்பகுதியில் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here