கோலாலம்பூர்:
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் (KPDN) கோலாலம்பூர் கிளையை சேர்ந்த அதிகாரிகள் இன்று அதிகாலை செந்தூலில் உள்ள மொத்த விற்பனையாளர் வளாகத்தில் நடத்திய சோதனையின் போது, 400,000 ரிங்கிட் மதிப்புள்ள 50,000 கிலோகிராம் சமையல் எரிவாயு (LPG) கைப்பற்றப்பட்டது.
ஒரு மாதகாலமாக மேற்கொண்ட உளவுத்துறை நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த சோதனை நடத்தப்பட்டது என்று, அதன் இயக்குனர் முகமட் சப்ரி செமன் கூறினார்.
குறித்த வளாகத்தில் மானிய விலையில் விற்கப்படும் 12 கிலோ மற்றும் 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களில் இருந்து 50 கிலோ எடையுள்ள தொழிற்சாலைகளுக்கு மாற்றப்படும் எல்பிஜி, டிகாண்டிங் செயல்முறையை உள்ளடக்கிய செயல்பாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இவ்வாறு மாற்றியமைக்கப்படும் இந்த சிலிண்டர்கள் பின்னர் ஒரு யூனிட் RM180 முதல் RM240 இடையே சந்தை விலையை விட குறைந்த விலையில் ஏனைய வணிகங்களுக்கு விற்கப்பட்டன என்று அவர் சொன்னார்.
எல்பிஜி சிலிண்டர்களைத் தவிர, மூடிய சுற்று தொலைக்காட்சி (CCTV) கேமராக்கள், மொபைல் போன்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை KPDN கைப்பற்றியது.
இந்த வழக்கு சப்ளை கட்டுப்பாடு சட்டம் 1961, மற்றும் பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் 2001 (AMLATFPUAA) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
“குற்றத்தின் தீவிர தன்மை காரணமாக, மொத்த விற்பனையாளரின் சரக்கு உரிமத்தை இடைநிறுத்தும் நடவடிக்கையில் KPDN உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.









