பலாத்கார குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் மரண தண்டனை நிறைவேற்ற சட்டம்- மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பலாத்கார குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்டம் அடுத்த சட்டசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1-ந் தேதிகளில் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட அதிர்வலைகள் தொடருகிறது. பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க மாநில அரசின் தலைமைச் செயலகம் நோக்கி மருத்துவ மாணவர்கள் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியை தடுத்து நிறுத்தியதால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு போர்க்களமானது.

போலீசார் மீது மாணவர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். போலீசாரும் மாணவர்கள் மீது சரமாரியாக கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்; தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்; ஒரு கட்டத்தில் தடியும் நடத்தினர். இதனால் மேற்கு வங்கத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கிய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசைக் கண்டித்து இன்று மேற்கு வங்க மாநிலம் முழுவதும் முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்தது. ஒரு சில பகுதிகளில் மட்டும் இயல்பு வாழ்க்கை இன்று லேசான பாதிப்புக்குள்ளானது.இந்த நிலையில் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு நிறுவன நாள் நிகழ்ச்சியில் முதல்வர் பானர்ஜி பங்கேற்றார்.

அப்போது பேசிய மமதா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் நிறுவன நாள் பாலியல் பலாத்காரத்துக்குள்ளானவருக்கான நாளாக அர்ப்பணிக்கிறோம். மேற்கு வங்க மாநில சட்டசபையில் அடுத்த வாரம் பலாத்கார குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் மரண தண்டனை விதிக்கை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும்.அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 31-ந் தேதி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க கோரி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். அதில் தாமும் பங்கேற்பேன் என அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here