ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் ஏற்பட்ட குழியின் அருகாமையிலுள்ள கழிவுநீர் கால்வாயில் இன்று அதிகாலை இரண்டு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை முக்குளிப்போர் இறங்கினர். ஆனால் சுமார் அரை மணி நேரம் கழித்து, குப்பைகள் சுவர் அவர்களைத் தடுத்ததால் மீண்டும் மேலெழும்பினர். கடந்த வெள்ளியன்று 8மீ ஆழமுள்ள மூழ்கிக் குழியில் விழுந்த இந்தியப் பிரஜையான விஜயலட்சுமியை தேடும் பணியில் முக்குளிப்போர் அதிகாலை 4 மணிக்கு அங்கு இறங்கியதாக பெர்னாமா தெரிவித்தது.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் ஜெனரல் நோர் ஹிஷாம் முகமது கூறுகையில், சமையல் எண்ணெய் பாட்டில்கள், டயர்கள், கெட்டியான கொழுப்பு மற்றும் முடிகள் ஆகியவற்றால் அடைப்பு ஏற்பட்டது. ஆனால் தேடல் குழு சிறிது சிறிதாக குப்பைகளை அகற்றி தடைகளை அகற்றத் தொடங்கியது. நீர்மட்டத்தை 1.5 மீட்டரில் இருந்து 0.8 மீட்டராகக் குறைப்பதற்காகக் குழு சேனலின் ஒரு பகுதியை சீல் வைத்து உள்வரவைத் திருப்பிய பிறகு இன்று காலை முக்குளிப்போர் மீண்டும் அங்கு இறங்கியிருக்கின்றனர்.
நேற்று இரவு 11.20 மணியளவில் கிரேன் ஒன்று அந்த இடத்தில் இருந்த குப்பைகளை அகற்றவும், சாக்கடை கால்வாயில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு அதிக சக்தி கொண்ட பம்புகளை பயன்படுத்தப்பட்டது. வலுவான நீரோட்டங்கள் அடைப்பை அடைவதை கடினமாக்கும் அதே வேளையில், சேனலில் உள்ள பாறைகள் மற்றும் மணல் உள்ளிட்ட பிற சவால்களை முக்குளிப்போர் எதிர்கொண்டதாகவும் தேடல் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதிகாலை 5 மணியளவில் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் தொடங்கியது.








