கடவுளுக்கு பிறந்த நாளா? ​பிள்ளையார், கணேசராக அவதாரம் எடுத்தது எப்படி?

முழு முதற் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். பொதுவாக தெய்வங்கள், மனிதர்களைப் போல் தாயின் கருவில் இருந்து தோன்றுவது கிடையாது. தெய்வ அவதாரங்கள் மட்டுமே தாயின் கருவில் இருந்து தோன்றுகின்றன. சிவன், பிறப்பும்- இறப்பும் இல்லாதவர்கள், சிவனில் இருந்து வெளிப்பட்ட பெண் சக்தியே அம்பிகை, சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொரியில் இருந்து தோன்றியவரே முருகப் பெருமான். சிவனின் காக்கும் சக்தியே பெருமாள் என புராணங்கள் சொல்கின்றன. அப்படி இருக்கையில் மற்ற எந்த தெய்வத்திற்கும் இல்லாமல் விநாயகருக்கு மட்டும் பிறந்த நாள் கொண்டாடுகிறோம். அவர் பிறக்கவில்லை என்றால், எந்த நாளை நாம் அவரின் அவதாரம் தினமாகவும், விநாயகர் சதுர்த்தியாகவும் கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விநாயகரின் பெயர்களும், அர்த்தங்களும்

விநாயகப் பெருமான் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. விநாயகர் அவதரித்த திதியான சதுர்த்தி திதியையே விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப் படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ‘விநாயகர் என்றால் ‘மேலான தலைவர்’ என அர்த்தமாகும். ‘விக்னேஸ்வரர்’ என்றால் ‘இடையூறுகளை நீக்குபவர்’ என்றும், ‘ஐங்கரன்’ என்றால் ஐந்து கரங்களை உடையவரெனவும் ‘கணபதி என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே அமைந்துள்ளன.

பார்வதி உருவாக்கிய பிள்ளையார்

பார்வதி உருவாக்கிய பிள்ளையார் :

ஒருமுறை சிவபெருமான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதி தேவி நீராடச் சென்றார். அப்போது தனக்கு காவல் காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி, தன்னுடைய அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்க கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்தி விட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார். அச்சமயம் அங்கு வந்த சிவபெருமானை, பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்.

​யானை தலை கிடைத்த கதை

நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து பிள்ளையார், தலை இல்லாமல் கிடந்த கோலத்தைக் கண்டு கோபமும், ஆவேசமும் கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் காளியாக மாறி உருவம் எடுத்து வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு பணித்தார். அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு யானையே முதலில் தென்பட்டது.

அவர்கள் அதன் தலையை வெட்டி எடுத்துச் சென்று இறைவனிடம் கொடுத்தனர். அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் உடலில் வைத்து உயிரூட்டி விட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அக மகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார். சிவன் அந்தப் பிள்ளையாருக்கு ‘கணேசன்’ என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார் என ‘நாரத புராணத்தில்’ தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார கதையாகும். இந்த நிகழ்ச்சி நடந்தது சுக்கில பட்ச சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அந்த நாள் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here