கூலாய் :
கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங், செடனாக் தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு ரிம5,000.00 நிதியை ஒதுக்கியுள்ளார்.
கூலாயில் உள்ள செடனாக் தோட்ட, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் கெலான் தோட்ட, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்திர திருவிழாவில் தியோ கலந்து சிறப்பித்தார்.
“இவ்விழாவின் சிறப்பையும், உற்சாகத்தையும் கண்டு நான் வியப்படைகிறேன். அதோடு, கூலாய் வாழ் சுற்று வட்டார மக்கள் கலந்துக் கொண்ட இவ்விழாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த ஆலய பொருப்பாளர்களுக்கு எனது பாராட்டுகள்.” என்றார்.
ஆலயத்திற்கு வழங்கப்பட்ட இந்த நன்கொடை, ஆலய மதம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த விழாக்களை ஏற்பாடு செய்ய உதவும் என தொடர்பு துணையமைச்சருமான தியோ நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையில், கடந்தாண்டு கூலாய் நாடாளுமன்ற சேவை மைய அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முழுமையான விண்ணப்பங்களில், இந்திய சமூகத்தைச் சேர்ந்த 17 ஆலய மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு மொத்தம் ரிம59,000 ஒதுக்கப்பட்டது.
”கூலாய் நாடாளுமன்றத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு ஆலய நிர்வாகமும் ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பப் பாரத்தை சமர்ப்பிக்க வரவேற்கப்படுகின்றனர். இதில் இன, மதம், அரசியல் பின்னணி பார்க்காமல், அனைவருக்குமான ஒதுக்கீடுகளை நான் தொடர்ந்து வழங்கி வருகிறேன். இம்முயற்சி தொடரும்.” என்றார்
கூலாயில் உள்ள அனைத்து சமூகத்தின் நல்வாழ்வுக்காக சிறந்த சேவையை வழங்க தாம் உறுதிபூண்டுள்ளதாகவும் தியோ தெரிவித்தார்.





















