ஹனோய்:
வியட்நாமில் யாகி சூறாவளி காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது; 128 பேர் மாயமாகியுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த 8ம் தேதி யாகி சூறாவளி புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 149 கி.மீ., வேகத்தில் வீசிய காற்றால் பல இடங்களில் கனமழை பெய்தது.
குறிப்பாக சாவ் பாங், பூதோ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த இந்த மழையால் பயிர்கள் பலத்த சேதம் அடைந்தன.
இந்நிலையில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது; 128 பேர் மாயமாகியுள்ளனர்; 800க்கும் அதிகமானோர் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி காயம் அடைந்துள்ளனர்.
தலைநகர் ஹனோயில் பாயும் சிவப்பு ஆற்றில் தற்போது வெள்ளம் சற்று குறைந்துள்ளது. எனினும் பல இடங்களில் கழுத்து அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.









