ஷா ஆலம்:
முஸ்லிம் சமுகத்தினர் அதிகமாக வரக்கூடிய இந்தியர்கள் நடத்தக்கூடிய உணவகங்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் இன்று கேட்டுக்கொண்டார்.
இதன் மூலம் பயனீட்டாளர்களின் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரின் உணவு பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்ய முடியும் என்று 78 ஆவது மஇகா பொதுப் பேரவையை தொடங்கி வைக்க வந்த துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி முன்னிலையில் அவர் ஒரு கோரிக்கையை முன் வைத்தார்.
முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு உணவு வகைகளை பரிமாறும் உணவகங்களுக்கு இனம், சமயம் வேறுபாடு பார்க்காமல் ஹலால் சான்றிதழ் பெறுவதற்கான நிபந்தனைகள் சுமையை தந்து விடக் கூடாது என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.




















