மகாளய அமாவாசை என்பது முன்னோர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டிய முக்கியமான காலமாகும். ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் செய்த பாவங்கள் காரணமாக அவர் இறந்த பிறகு எமலோகத்தில் பலவிதமான துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும். இதனால் அவர் பித்ருலோகத்தையும் அடைய முடியாமல், மோட்ச லோகத்தையும் அடைய முடையாமல் கஷ்டப்பட வேண்டி இருக்கும். அப்படி எமலோகத்தில் அவர் துன்பப்படாமல் காக்கக் கூடிய விஷயம், அவரது சந்ததியினர் பூலோகத்தில் அக்கும் தர்ப்பணம், தானம் ஆகியவை தான். அவரத குடும்பத்தினர் கொடுக்கும் திதியால் அவரது ஆத்மா சாந்தி அடைந்து, அவர்களின் கர்மவினைகள் குறைந்து விடும் என்பது நம்பிக்கை.
முன்னோர்களை வழிபட மறந்த பாவங்கள் தீரவும், அதனால் குடும்பத்தில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகள் தீரவும், ஜாதகத்தில் ஏற்படும் பலவிதமான தோஷங்கள் நீங்கவும் வழிபட வேண்டிய மிக முக்கியமான நாள் மகாளய அமாவாசை ஆகும். இதுவரை அமாவாசை விரதமே இருந்தது கிடையாது என்பவர்களும் கூட இந்த நாளில் முன்னோர்களை வழிபட்டு, பலவிதமான நன்மைகளையும் முன்னோர்களின் ஆசியையும் பெறுவதற்கு ஏற்ற நாளாகும்.
மகாளய அமாவாசை இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி புதன்கிழமை வருகிறது. அக்டோபர் 01ம் தேதி இரவு 10.35 மணி முதல் அக்டோபர் 03ம் தேதி அதிகாலை 12.34 வரை அமாவாசை திதி உள்ளது. மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏற்ற நேரமாக காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலான நேரம் சொல்லப்பட்டுள்ளது. முன்னோர்களுக்கு இலை போட்டு படையல் இடுவதற்கு ஏற்ற நேரமாக காலை 11 மணி முதல் 11.45 வரையிலான நேரம் சொல்லப்பட்டுள்ளது. இது தவிர்த்து பகல் 01.30 மணி க்கு பிறகு பகல் 2 மணிக்குள்ளான நேரத்தில் படையல் போட்டு வழிபடலாம்.
மகாளய அமாவாசை அன்று செய்ய வேண்டிய 4 விஷயங்கள்
* காலையில் எழுந்து குளித்து விட்டு நீர் நிலைகளுக்கு அருகிலோ, கோவிலில் சென்றோ, வீட்டிற்கு அந்தணரை அழைத்து ஹோமங்கள் செய்தோ பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். எதுவும் முடியாதவர்கள் எளிமையாக வீட்டிலேயே முன்னோர்களை நினைத்து, அவர்களுக்கு நன்றி தெரிவித்து, நம்முடைய குடும்பம் சிறப்பாக இருக்க ஆசி வழங்க வேண்டும் என வேண்டிக் கொண்டு, எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபட வேண்டும். இந்த தண்ணீரை கால் படாத, அதே சமயம் முளைக்காத இடத்தில் ஊற்ற வேண்டும். அப்படி முடியாதவர்கள் வீட்டின் சிங்க்கில் ஊற்றி விடலாம்.
* பிறகு பகல் பொழுதில் முன்னோர்களின் படத்திற்கு முன் இலை பரப்பி அதில் அவர்களுக்கு பிடித்த உணவுகளை அல்லது வீட்டில் சமைக்கும் உணவுகளை பரிமாறி வைத்து வழிபட வேண்டும். பிறகு காகத்திற்கு சாதம் வைத்த பிறகு விரதம் இருப்பவர்கள் உணவு சாப்பிடலாம். வசதி இருப்பவர்கள் முன்னோர்களை நினைத்து புதுத்துணி எடுத்து வைத்தும் வழிபட்டு, பிறகு அதை யாருக்காவது தானமாக அளிக்கலாம்.
* மகாளய அமாவாசை அன்று கண்டிப்பாக யாராவது ஒருவருக்காவது உணவு, உடை போன்ற ஏதாவது ஒன்றை தானமாக வழங்க வேண்டும். சாதம், இட்லி என ஏதாவது ஒரு உணவை முன்னோர்களை மனதார நினைத்து வேண்டிக் கொண்டு அளிக்க வேண்டும். மனிதர்கள் யாருக்கும் உணவு அளிக்க முடியாதவர்கள் காகம், நாய், பூனை போன்ற ஏதாவது ஒரு உயிரினத்திற்கு உணவு வழங்கலாம்.
* நிறைவாக மாலை 6 மணிக்கு பிறகு வீட்டில் உள்ள முன்னோர்களின் படத்திற்கு முன்பு தனியாக ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். வழக்கமாக பூஜையின் போது சுவாமிக்கு படைக்கும் விளக்கு ஏற்றி இருந்தாலும், முன்னோர்களுக்கு என தனியாக ஒரு விளக்கு ஏற்ற வேண்டும். இது அவர்கள் மோட்சத்திற்கு செல்வதற்கு வழி காட்டும்.




















