பீடோரில் நேற்று நடந்த கொலை தொடர்பில் நால்வர் கைது!

ஈப்போ:

பீடோரில் நேற்று ஒரு நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் மைத்துனியிடமிருந்து நேற்று அதிகாலை 4.21 மணியளவில் போலீசாருக்கு கிடைத்த புகாரையடுத்து சந்தேக நபர்கள் நேற்றும் இன்றும் தனித்தனியாக கைது செய்யப்பட்டதாக தாப்பா மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டன்ட் முஹமட் நைம் அஸ்னாவி தெரிவித்தார்.

“நேற்று அதிகாலை 2:30 மணியளவில், அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் இருந்தபோது, சந்தேகநபர்களால் தாக்குதலுக்குள்ளான 34 வயதான பாதிக்கப்பட்டவர் உயிருக்கு போராடிக்கொண்டும் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டுக்கொண்டும் இருந்தார் என்றும், உடனே அவரது கணவர் உள்ளூர் சந்தேக நபர்களில் ஒருவருடன் வாதிட்டுக் கொண்டிருந்ததைக் கேட்டதாக புகார்தாரர் கூறினார். .

பின்னர் புகார்தாரரின் கணவரின் தலையில் “சந்தேக நபர் சுத்தியலால் தாக்கினார், இதனால் தலையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, புகார்தாரரும் அவரது கணவரும் சிகிச்சைக்காக தாப்பா மருத்துவமனைக்குச் சென்றனர், ”என்று அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

புகார்தாரரும் அவரது கணவரும் மருத்துவமனையில் இருந்து குறித்த தொழிலாளர்கள் குடியிருப்புக்கு திரும்பியபோது, ​​பாதிக்கப்பட்டவர் வீட்டிற்கு வெளியே சத்தமின்றிக் கிடப்பதைக் கண்டு அவர் இறந்துவிட்டதாக சந்தேகித்ததாக முகமட் நைம் கூறினார்.

புகாரைத் தொடர்ந்து, குடியிருப்பில் தங்கியிருந்த தொழிற்சாலை ஊழியர்களான 28 மற்றும் 37 வயதுடைய இரண்டு வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர், மேலும் இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபர்களாக கருதப்படும் 33 மற்றும் 44 வயதுடைய இரண்டு உள்ளூர் சந்தேக நபர்களையும் அவர்கள் கைது செய்தனர்.

முகமட் நைமின் கூற்றுப்படி, இரண்டு வெளிநாட்டு சந்தேக நபர்களுக்கு முன் குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை, அதே நேரத்தில் இரண்டு உள்ளூர் சந்தேக நபர்களுக்கும் முந்தைய குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பதிவுகள் உள்ளதாக அவர் சொன்னார்.

விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு வெளிநாட்டு சந்தேக நபர்களும் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று தாப்பா மாவட்ட நீதிமன்றில் போலீசார் விண்ணப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் முகமட் நைம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here