கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக ஊடகங்களை குறைந்த அளவிலேயே பயன்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
கோவா அனைத்துலகத் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர், சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டைக் குறைப்பது குறித்தும் தன் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
கோவா சென்ற சிவகார்த்திகேயனை நடிகை குஷ்பு பேட்டி கண்டுள்ளார்.
இந்த பேட்டியில்தான் சமூக வலைத்தளங்கள், மன அழுத்தம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தயக்கமின்றி பதில் அளித்தாராம் சிவா.
“என்னைப் போல் மற்றவர்களும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைப் குறைப்பது நல்லது. ஒருவேளை எலான் மஸ்க், என் டிவிட்டர் பக்கத்தை முடக்கினால் அதுவே எனக்குக் கிடைத்த முதல் வெற்றியாக இருக்கும் என நினைக்கிறேன்,” என்று சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு, தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் குஷ்புவுடனான அந்த உரையாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சோகத்தில் இருந்து வெளிவர மேடைகளைப் பயன்படுத்தினேன். கைத்தட்டல்கள்தான் எனக்கான நல்ல சிகிச்சை முறையாக அமைந்தன.
“நான் படித்த கல்லூரியில்தான் எனக்கான முதல் மேடை அமைந்தது. என் நண்பர்கள்தான் மேடையில் ஏற ஊக்கமும் உற்சாகமும் அளித்தனர்,” என்று சிவா மேலும் கூறியுள்ளார்.
மற்றொரு சுவாரசியத் தகவலாக, கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தாம் எந்த ஒரு படத்தையும் திருட்டுப் பதிப்பில் பார்த்ததில்லை என்றும் அந்த அளவுக்கு தாம் சினிமாவை நேசிப்பதாகவும் குஷ்புவுடனான பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.




















