செத்தியூ:
கிளாந்தான். திரெங்கானுவில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருவதை அடுத்து அவ்விரு மாநிலங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 50 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார். பிரதமர் துறையின் ஐசியூ எனப்படும் அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு வாயிலாக இந்தத் தொகை விரைந்து ஒதுக்கப்படுகிறது. திரெங்கானு மாநிலத்திற்கு 25 மில்லியன் ரிங்கிட்டும் கிளாந்தானுக்கு 25 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்படுகிறது.

சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளைச் சீரமைப்புக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். உலு பெசுட், திரெங்கானுவில் சாலை மட்டத்தை உயர்த்துவதற்கும் நீர்வரத்துக் குழாய்களைப் பொருத்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார். இதற்கு முன் இந்த இரு மாநிலங்களும் 50 மில்லியன் ரிங்கிட்டை பெற்றிருந்தன. ஆனால் வெள்ள நிலைமை மோசமடைந்திருப்பதால் கூடுதலாக அவ்விரு மாநிலங்களுக்கும் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
செத்தியூவில் உள்ள தெலாகா பாப்பான் ஆரம்பப்பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வெள்ள நிவாரண முகாமுக்கு வருகை புரிந்த பின்னர் பிரதமர் இத்தகவலை சொன்னார்.




















