ஷா ஆலம்:
நாடு முழுவதும் வெள்ள நிலைமை, குறிப்பாக கிளந்தான் மற்றும் திரெங்கானுவில், 2014 ஆம் ஆண்டை விட இந்தாண்டு மிக மோசமாக இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது என்று டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
தென் சீனக் கடல் மற்றும் மலக்கா ஜலசந்திகளில் பெரும் உயர் அலை நிகழ்வு காரணமாக இந்த வெள்ள நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்பது மிகவும் கவலைக்குரியது என்று துணைப் பிரதமர் கூறினார். இருப்பினும், மழை வீழ்ச்சி குறையும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (METMalaysia) முன்னறிவித்தல் விடுத்துள்ளதைத் தொடர்ந்து, வெள்ள நிலைமை அதிகரிக்காது என்று தான் நம்புவதாக அவர் சொன்னார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வசிப்பவர்கள் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுக்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு நினைவூட்டிய துணைப்பிரதமர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 82,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஆட்கள் தயாராகவுள்ளனர் என்று சொன்னார்.
தீபகற்ப மலேசியா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 146,611 ஆக இருந்த நிலையில், இன்று காலை 152,377 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.










