ஜோகூர் மாநில அரசு தனது வரி வருவாயில் 20% மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு திருப்பி வழங்குமாறு கோருகிறது. ஜோகூர் ரீஜண்ட் துங்கு மஹ்கோத்தா இஸ்மாயிலின் உத்தரவுக்கு இணங்க, ஜோகூர் மாநில அரசு மீண்டும் மத்திய அரசிடம் முறையிடுகிறது. மாநில வரி வருவாயில் குறைந்தது 20% ஜோகூருக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி கூறினார்.
ஜோகூர் மக்கள் மாநிலத்தின் வருவாயின் பலன்களைத் தொடர்ந்து பெறுவதை உறுதி செய்வதற்கும் மேலும் விரிவான வளர்ச்சி முயற்சிகளை செயல்படுத்துவதற்கும் இந்த கோரிக்கை முக்கியமானது என்று கோத்தா இஸ்கந்தரில் ஜோகூர் சட்டமன்றக் கூட்டத்தின் நிறைவின் போது கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது. கூட்டத்தின் போது, நவம்பர் 21 அன்று தாக்கல் செய்யப்பட்ட 1.999 பில்லியன் ரிங்கிட்டிற்கான மாநிலத்தின் 2025 பட்ஜெட்டுக்கு மாநில சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது.
ஜூன் மாதம், ஒன் ஹபீஸ், வரி வருவாயில் 30% மீண்டும் ஜோகூருக்கு ஒதுக்குவதற்கான அதிகாரப்பூர்வ கோரிக்கை புத்ராஜெயாவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். உண்மையான கோரிக்கை 20% அல்லது 30% என்று ஜோகூர் சட்டசபை சபாநாயகர் புவாட் சர்காஷி இன்று கேட்டதற்கு பதிலளித்த ஓன் ஹபீஸ், மாநில அரசு முதலில் 20% கோருகிறது. ஆனால் இப்போது 10% கூட போதுமானது என்று கூறினார். மாநிலத்தில் 56 மாநில சட்டமன்ற இடங்கள் உள்ளதாகவும், அவை ஒவ்வொன்றும் 10 மில்லியன் ரிங்கிட் மேம்பாட்டு ஒதுக்கீட்டைக் கோரினால் மாநில அரசுக்கு அரை பில்லியன் ரிங்கிட்களுக்கு மேல் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.





















