உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் லிரெனை வீழ்த்தி தமிழகத்தின் குகேஷ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தார்.18 வயதான குகேஷ், செஸ் உலகின் 18-வது சாம்பியனாக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் குறைந்த வயதில் சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்த வீரர் என்ற மகத்தான சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
இந்திய தரப்பில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை ருசித்த 2-வது வீரர் ஆவார்.உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர் குகேஷிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலக செஸ் சாம்பியனான டி.குகேஷுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,எங்கள் சொந்த தெலுங்கு பையன், இந்திய கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ், சிங்கப்பூரில் 18 வயதில் உலகின் இளைய செஸ் சாம்பியனாகி வரலாற்றை எழுதுவதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
அவரது சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. வரும் காலங்களில் இன்னும் பல வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற வாழ்த்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.ஆந்திர முதல்வரின் இத்தகைய பதிவு நெட்டிசன்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
ஆந்திர முதல்வரின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சென்னையில் பிறந்தவரான குகேஷ்-ஐ ‘தெலுங்கு பையன்’ என்று குறிப்பிடுவது சரியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். நாட்டிற்கு பெருமை தேடிக் கொடுத்த இளம் சாம்பியனை அனைவரும் உரிமை கொண்டாடலாம், ஆனால் மொழி வாரியாக பிரிப்பது வீண் சர்ச்சைகளையே உண்டாக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.