2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, அனைத்து மாநிலங்களின் பங்கும் அவசியம் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
ஒன்பதாவது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்கள் நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சரியான பாதையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாகவும், நூறு ஆண்டுகளில் கண்டிராத பெருந்தொற்றை நாம் வெற்றிகரமாக கடந்து வந்துள்ளோம் என்றும் தெரிவித்தார். இந்திய மக்கள் உற்சாகமும், நம்பிக்கையும் நிறைந்தவர்கள் என்று பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடு என்ற நிலையை அடைவது நம் ஒவ்வொருவரின் இலக்கு என்று கூறினார்.
தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார். மேலும் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான மைல்கல்லாக இந்த நிதி ஆயோக் கூட்டம் அமைய வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.



















