மஞ்சோங், டிச.18-
டிண்டிங்ஸ் இந்தியர் சங்கம் 2ஆவது ஆண்டாக கால்பந்து விளையாடி வரும் இளையோரை கௌரவித்தது. அவர்களுக்கு இச்சங்கத்தின் தலைவர் எம்.மகாலிங்கம், அவர்தம் நிர்வாகக் குழுவினருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொண்டார் மலேசிய கால்பந்து சங்கத்தின் பயிற்சியாளரும் ஆசிரியருமான அ. புகழேந்தி.
ஓர் இந்திய இயக்கம் இம்மாதிரியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டால் இந்திய மாணவர்களை விளையாட்டுத்துறையில் மாநில, தேசிய, அனைத்துலக ரீதியில் கொண்டு சேர்க்க முடியும்.
கடந்த இரு வருடங்களாக வருட இறுதியில் 6 வயது முதல் 16 வயது சிறார்கள் வரை கால்பந்து அகாடமி வாயிலாக ஒவ்வொரு வார இறுதியில் பயிற்சிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரத்தில் குறிப்பாக இங்குள்ள இந்திய பெற்றோருக்கு பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்வோம். தங்கள் பிள்ளைகளின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் நன்கு உணர்ந்துகொண்டு அவர்கள் கால்பந்து விளையாட்டுத்துறையில் அனுமதி வழங்கிய பெற்றோருக்கு நன்றி.
அத்துடன், தங்கள் பிள்ளைகள் பயிற்சியில் ஈடுபடும்போதும் அவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதும் சிறந்த பண்புநலனாகும் என்று அவர் கருத்துரைத்தார்.
இந்த டிண்டிங்ஸ் இந்தியர் சங்கம் இந்நாட்டிலுள்ள அனைத்து இந்திய இயக்கங்களுக்கு ஒரு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு அவர்களது மாவட்டத்தில் இந்தியர்களின் தேவைகளை அறிந்து இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் கால்பந்து விளையாட்டில் இந்திய சிறார்கள் வளர்ச்சி காண வேண்டும் என்று அனைத்து தேவைகளையும் செய்து வருகின்றனர். வெறுமனே இல்லாமல் இந்திய இயக்கம் என்ற பெயரில் மானியத்தைக் குறிவைத்து இவர்கள் செயல்படவில்லை. இவர்களைப் போன்று மற்ற இந்திய இயக்கங்கள் செயல்பட்டால் மேலும் சிறப்பாகும் என்று புகழேந்தி கூறினார்.








