வெளிநாட்டு மாணவர் விசா நடைமுறைகளை மாற்றுகிறது ஆஸ்திரேலியா

சிட்னி:

அதிகரித்துள்ள அனைத்துலக மாணவர் எண்ணிக்கையைச் சமாளிக்கும் முயற்சிகளை ஆஸ்திரேலியா மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், மாணவர் விசா விண்ணப்பங்களுக்கான நடைமுறைகளைக் கையாளும் விதத்தை ஆஸ்திரேலியா மாற்றிக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீரான முறையில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் விசாக்களைக் கையாள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்நாட்டின் கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 19) தெரிவித்தார்.

மாற்றங்களுக்குக்கீழ் சாதாரண விசா விண்ணப்பங்கள், அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விசா விண்ணப்பங்கள் என்று விண்ணப்பங்கள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்.

கல்வி நிலையங்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கான 80 விழுக்காட்டு இடங்கள் நிரப்பும் வரை அவற்றுக்கு ஒப்புதல்கள் விரைவில் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு மாணவர் விசா விண்ணப்பங்கள் மெதுவாகக் கையாளப்படும்.

அடுத்த ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தேர்தலுக்கு முன்பு வெளிநாட்டவர் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் அந்நாட்டின் நடு-இடது சாரி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சேர்த்துக்கொள்ளப்படும் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கைக்கு அரசாங்கத்தால் உச்சவரம்பு விதிக்க முடியாமல் போனதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here