நிலத்தகராறு வழக்கில் ராமாயணத்தை சுட்டிக் காட்டி தீர்ப்பு வழங்கிய நீதிபதி

லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பஹேரி பகுதியை சேர்ந்தவர் ரகுவீர் சிங். அவரது மகன் மோனு என்ற தேஜ்பால் சிங். ரகுவீர் சிங்குக்கும், அவரது சகோதரர் சரண் சிங்குக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த பிரச்சினையில் ரகுவீர் சிங் மற்றும் மோனு ஆகிய இருவரும் சேர்ந்து சரண் சிங்கை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 20-ந்தேதி சுட்டுக் கொலை செய்தனர்.

இது தொடர்பாக ரகுவீர் சிங் மற்றும் மோனு மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பரேலி மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது.

ரகுவீர் சிங் மற்றும் மோனு மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கில் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

முன்னதாக தீர்ப்பு வழங்கும்போது ராமாயணத்தை குறிப்பிட்டு பேசிய நீதிபதி, ராமர் வனவாசம் சென்றபோது அவரது சகோதரர் பரதன் அரியணை ஏற மறுத்தார். ராமரின் செருப்பை அரியணையில் வைத்து ஆட்சியை நடத்தினார். இது ஒரு சகோதரனின் அன்பைக் காட்டுகிறது. ஆனால் நீங்கள் நிலத்துக்காக உங்கள் சகோதரரை கொன்றீர்கள். நீதி, உண்மை மற்றும் கண்ணியத்தின் பாதையில் செல்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். ஒரு நபர் கண்ணியத்தை மீறினால், அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here